7.05.2010

விம்பிள்டன் டென்னிஸ்-நடால் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஸ்பெயினின் ரஃபேல் நடால் வென்றுள்ளார்.

இறுதிப் போட்டியில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை 6-3,7-5, 6-4 என்கிற நேர் செட்டுகளில் அவர் வென்றார்.

உலக ஆடவர் தரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரஃபேல் நடால் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை வெல்வது இது இரண்டாவது முறையாகும்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் தனது முதல் பட்டத்தை 2008 ஆம் ஆண்டு வென்ற ரஃபேல் நடால், கடந்த ஆண்டு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தனது பட்டத்தை தக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அண்மையில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியை அவர் ஐந்தாவது முறையாக வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 24 வயதாகும் ரஃபேல் நடால், ஆறு முறை விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ள ரோஜர் ஃபெடரரின் 16 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை எட்டிப் பிடிக்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்று டென்னிஸ் செய்தியாளர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை வென்றுள்ள ரஃபேல் நடாலிடம் தோல்வியடைந்துள்ள தாமஸ் பெர்டிச், ரோஜர் ஃபெடரரை கால் இறுதிப் போட்டியில் வென்றிருந்தார்.

0 comments:

Post a Comment